AZHAGIRI.R

AZHAGIRI.R

Saturday, April 24, 2010

நாத்திகம் என்பது - தந்தை பெரியார்



பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாத - கடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.

தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான் இவர்களைச் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன்.

நாத்திகம் என்பது

நாத்திகம் அவரவர்கள் மன உணர்ச்சி - ஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல; ஒரு கட்சி அல்ல; ஒரு மத மல்ல.

ஒருவனை ஒருவன் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாத்திகமாகும். கடவுளைச் சரியாக அறியாததே யாகும். அந்த வார்த்தையை உண்டாக்கினவர்களே நல்ல நாத்திகர்களாவர். கடவுள் இருந்தால் ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்கவாவது முடியுமா? ஆகவே நாத்திகம், நாத்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளேயாகும். கடவுள் வியாபாரக்காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்தக் கவலையே இருக்க நியாயமில்லை.

நாத்திகன் ஆத்திகன்

காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.

நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை என்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு
சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.



நாத்திகத்தின் பிறப்படம்

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ அங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒருவனைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில் கடவுளுக்குத்தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே ஒரு மனிதன் இப்படி முட்டாள் தனமான காரியத்தைச் செய்வானா அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியத்தை செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை நாத்திகன், கடவுளை மறுக்கிறவன் என்று குறையோ குற்றமோ சொல்ல மாட்டான்.

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

Monday, April 19, 2010

தமிழா

தமிழா ,

நீ வாழ்வது தமிழ்நாடா அல்ல நெஞ்சில் ஈரமில்லா கொடிய காட்டுமிராண்டியின் ஆதிக்கத்தின் பிடியில் வாழ்கிறோமா?
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராம், மாவீரர் பிரபாகரன் அவர்களின் தாய்க்கு தாய் தமிழகத்தில் மருத்துவம் மறுக்கப்படவேண்டிய காரணம் என்ன? புறநானூற்றில் வீரப் பெண்மணிகளின் வாழ்க்கையை நாமெல்லாம் வாசித்தோமே அது என்ன நிகழ்வு இல்லையா? மற்ற இனத்தவர்களைப் போல தமிழர்கள் என்ன வெற்று வேட்டுகளா?
தமிழ்நாட்டை முதலில் நாம் மீட்க வேண்டும். நம்முடையவர்களின் தாய்க்கு இத்தகைய ஒரு நிலை வந்தால் நாம் என்ன செய்வோம், எண்ணிப் பாருங்கள், அதைத் தான் நாம் செய்ய வேண்டும்.
இந்த மண்ணில் மருத்துவம் தரவில்லை என்றால், மற்ற இனத்தவர்களுக்கெல்லாம் ஏன் இங்கே மருத்துவம் நாம் தர வேண்டும்?

தமிழா விழித்துக் கொள் , இல்லையேல் உன் சந்ததியே இங்கு இல்லாமல் பொய் விடக் கூடும்
தமிழர்களே தன்மானம் பெறுங்கள்

இரா.அழகிரி,
நெல்லிக்குப்பம்.